வியாழன், 18 மே, 2023 | By: Ananda

என் வாழ்வில் வாணவில்லாக வந்த மனிதர்களுக்கு நன்றிகள்..

 தமிழ் மீதும், வாசிப்பு, கவிதைகள், கதைகள் என என்னை ஊக்குவித்து, அந்த திசையில் பயணிக்க காரணமாக சில நல்ல உள்ளங்கள் என் வாழ்வில் அமைந்தன. முதன் முதலில் கவிதை மீது ஆர்வம் பிறந்தது, நான்காம் வகுப்பில், ஒரு free period, அதாவது வழக்கமாக வரும் வகுப்பு ஆசிரியர் விடுமறையில் சென்றிருந்ததால், சுந்தர் ராமன் எனும் ஆசிரியர் வந்து வகுப்பில் கவிதைகள் பற்றி பேசினார். சிறுவர்களை ஈர்க்கும் வகையில் சில வரி கவிதைகள் சொன்னார். எங்களை எல்லாம் கவிதை எழுத ஊக்குவித்தார். அவர் சொன்னதில் இரு வரி ஞாபகம் இருக்கிறது இன்னும் எனக்கு.

 "பேசும் எலி, பேசும் எலி பொய்ய சொல்லிச்சான்,

அது பொய்யை சொன்ன காரணத்தால் வாயி போச்சுதாம்"

இப்படியாக அவர் பேசி விட்டு போன அடுத்த வகுப்பே நான் நிலவை பற்றி எதோ சில வரிகள் எழுதி அவரிடம் எடுத்து சென்று நீட்ட, அவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்து அதை பாராட்டி , ஒரு பாராட்டு கவிதையும் எழுதி கொடுத்தார். என் வாழ்கையின் மிகச்சிறந்த பொக்கிஷமாக அதை வைத்திருந்தேன். அந்த காகிதம் பிய்ததுக்கொண்டு கிழிந்த நிலையிலும் ஒரு பென்சில் பாக்ஸில் பத்திர படுத்தி வைத்திருந்தேன். இருந்தும் ஏழாம் வகுப்பு படிக்கும் போது, வீடு மாற நேர்ந்தது. அதில் எப்படியோ தொலைந்து போனது. நான் முதலில் எழுதிய கவிதையும், அதை பாராட்டி அவர் எழுதிய கவிதையும்..இன்றும் என் பெரிய இழப்பாக அதை எண்ணுகிறேன். 


       அவரை தொடர்ந்து இன்னும் இரண்டு பேர், என்னை எப்பொழுதும் பாராட்டி நம்பிக்கை அளித்து ஊக்கம் தந்தவர்கள். ஒன்று என்னுடைய மாமா Ananchaperumal C  அவர்கள். புத்தகங்கள், இலக்கியம், மொழி, கவிதைகள், கதைகள் என்றால் அவரிடம் பேசி கொண்டே இருக்கலாம். கடல் போன்ற இலக்கிய அறிவு அவருக்கு. அதில் ஒவ்வொரு முறை சந்திக்கும்போதும், ஒரு துளியையாவது பருகிவிட வேண்டும் என்ற வேட்கை எனக்கு. எனக்கும் அவருக்கும் குறைந்தது 40 வயது வித்யாசம் இருக்க கூடும். எனினும் மிகவும் அன்பாக பாராட்டி உற்சாகப் படுத்துவார். சென்ற வருடம் பூவுலகம் நீத்தார். அதற்கு முன் இதை எழுதி இருந்தால் எவ்வளவோ மகிழ்ச்சி அடைந்து இருப்பார். எப்பொழுது சந்தித்தாலும் என்ன புத்தகம் படிக்கிறேன் என்று கேட்பார். அவரிடம் இருந்து பட்டுகோட்டை பாடல்கள், மற்றும் பல புத்தகங்கள் எடுத்து வந்திருக்கிறேன்.


    அவரை அடுத்து, எனக்கு மொழி மீதும் கவிதைகள் மீதும் பற்று ஏற்பட காரணமாக இருந்தவர், ஒரு நேசமிகு மனிதர், சுந்தர் ராஜன் அண்ணா. என் அம்மா state Bank of India வங்கியில் 89 முதல் 2017 வரை பணிபுரிந்தார். என் தந்தை இறந்த பின், அவரது வேலை என் அம்மாவிற்கு கிடைத்தது. அம்மா முதல் முதலில் வங்கியில் செய்த வேலை, despatch பகுதியில். அதாவது 30 வருடங்களுக்கு முன் கணக்கு வழக்குகள் எல்லாம் நீண்ட கனமான நோட்டு புத்தகங்களில்(ledger) எழுதப்பட்டன. அதை எழுதுவது, சரி பார்ப்பது போன்ற வேலை அம்மாவுக்கு. கிண்டி branch மேல் மாடியில் ஒரு மூலையில் ஒரு அறை. அங்கே ஒரு 6,7 பேர் இந்த வேலை செய்து வந்தனர். சனிக்கிழமைகளில் மாதம் ஒரு முறை அல்லது இரு முறை, என் அம்மாவோடு நானும் வங்கிக்கு செல்வேன். அறை நாள் தான் என்பதால் அழைத்து செல்வாள். இயற்கையாகவே வாயாடி என்று பெயர் எடுத்திருந்த நான், அங்கு என் அம்மாவுடன் வேலை பார்த்த அனைவருக்கும் கரும்பலகையில் பாடம் எடுப்பது, கேள்வி கேட்பது என்று பேசிக்கொண்டே இருப்பேன். இருப்பினும் அறை நாள் கழிக்க வேண்டுமே. என் அதிர்ஷ்டம், அந்த அறையில் தான் வங்கியின் நூலகம் இருந்தது. எனவே எதாவது புத்தகங்களை எடுத்து படித்து பொழுதை கழிப்பேன். புத்தகங்கள் அனைத்தும் பெரியவர்கள் அகவைக்கு உகந்ததாக இருந்ததால், முடிந்தவரை கவிதை புத்தகங்கள் தான் எடுப்பேன். அங்கு அடிக்கடி வந்து போகும் அண்ணா, சுந்தர் ராஜன் அண்ணா. அழகாக கவிதை எழுதுவார். நான் எழுதி கொட்டிய வரிகளை கவிதை என்று ஏற்று பாராட்டி, பதிலுக்கு எனக்கு முத்தான கவிதைகள் எழுதி கொடுத்து உற்சாக படுத்தினார். 


இதை எல்லாம் இன்று நினைதுகொள்ள காரணம், பரணில் இருந்து பழைய புத்தகங்களை இறக்கி எடுத்த போது, இன்னமும் பல கிண்டி SBI library புத்தகங்கள் என்னிடம் இருந்தன. சிறு வயதில் படித்து இன்னமும் மனதிலேயே நிற்கும் ஒரு கவிதை. யார் எழுதியது என்று கூட இத்தனை நாள் நினைவில்லை. இன்று அந்த புத்தகம் கிடைக்க, அது அமுத பாரதியின் வரிகள் என்று தெரிந்தது. அந்த கவிதையும் புத்தகத்தையும் புகைப்படமாக பகிர்கிறேன் இந்த பதிவில். எதையோ இழந்து, எல்லாரிடமும் எதையோ தேடுகின்ற சிறுவர்களிடம், எந்த எதிர்பார்ப்பும் இன்றி, அன்பு செய்யும் மனிதர்கள், நொடிப் பொழுதில் அந்த பிள்ளைகளின் வாழ்வில் வானவில் போல் வந்து சென்றாலும், அவர்களின் தாக்கம் வாழ்நாள் முழுதும் பசுமையான நினைவாக அந்த குழந்தைகளின் மனதில் பதிந்து விடுகிறது. நான் இன்றும் நான் சந்திக்கும் ஒவ்வொரு சிறு வயதில் இழப்பை அறிந்த குழந்தைக்கும், ஒரு வானவில்லாக இருக்க முயற்சிக்கும் காரணம், இவர்களை போல் என் வாழ்வில்  சந்தித்த சில நல் உள்ளங்கள்தான்.








சனி, 7 ஜனவரி, 2023 | By: Ananda

தேடல்..

 

மீண்டும் அதே கேள்விகள் என்னுள்,

கடவுள் இருக்கிறாரா?

இருப்பின் என்ன உருவம்?

                     என்ன பெயர்?

நான் கடவுள் நம்பிக்கை கொண்டவளா?

என்னுள் பல வருடங்களாக எழுந்து கொண்டே இருக்கும் கேள்விகள்..

விடைகளையும், எனக்கான உண்மையையும்

இன்னமும் தேடி கொண்டிருக்கிறேன்..

இல்லை என்று மறுக்கவில்லை

இருக்கிறார் என்ற உறுதியும் இல்லை,

எனினும்,

மிகுந்த பசியில், சுடு சோறும், நெய்யும்,

தாளிப்பு மனம் வீசும் ரசமும்,

புலரியின் எகாந்தத்தில், பருகிய தேநீர் 

அந்தியில் வண்ணம் குழைத்த வானம்,

மின் கம்பிகளின் மேல் அமர்ந்து கதைக்கும் குருவிகள்,

கூடடையும் பறவைகளின் ஒலி,

மழலையின் சிரிப்பு,

மழையின் வாசம்,

மலையின் மௌனம்,

நீண்ட பாதைகள்,

அணைப்பின் கதகதப்பு,

முத்தத்தின் ஈரம்,

நண்பர்களின் அருகாமை

பூமியெங்கும் சிதறி கிடக்கும் காட்டுபூக்கள்,

கடற்கரை அலையில் நனைந்த பாதங்கள்,

நினைவுகள் சுமந்த புகைப்படங்கள்,

புத்தகத்தின் வாசம்,

சாய்ந்து கொள்ள தோள்,

இருக பற்றிட கை விரல்கள்,

இவற்றில் எல்லாம் ஏதோ ஒரு அற்புதம்

பொதிந்து கிடக்கிறது,

இவற்றுள் தான் எனக்கான பதில்கள் ஒளிந்து கிடக்கின்றன என்று நம்புகிறேன்,

இவை போதாதா எனக்கு!!?


சனி, 2 மே, 2020 | By: Ananda

ஏகாந்தம்






மரத்துப் போன மனவெளியில், 
மெல்ல உறைந்தப் பனி உருகக் கண்டேன்,
மூலையில் புதைத்துவைத்த உணர்ச்சிகள்-
ஒவ்வொன்றாய் உருக்கொண்டு 
உச்சம்தொட விழைதல் கண்டேன்,
மீண்டும் முளைத்த அதே பழைய ஏக்கங்கள்,
பழைய ஏக்கங்கள் தூண்டி திரியேற்ற 
புதிய சிந்தனைகளின் சலனங்கள்..
சிறு பொரி கிளம்பி பெருந்தீ ஆவது போல்,
மெதுவாய் எரிய துவங்குது அதே வேட்கை..
உன்ன உறங்க உழைக்க மட்டும் பழக்கி வைத்த எண்ணங்கள்,
இன்று 
மண்ணை துளைக்கும் மழை சத்தம் கேட்டு,
தட்டி எழுப்புகின்றன, ஆசையாய் பேராசைகளை,
மண்வாசம் வேண்டும்,
மரக்கிளையில் பூத்துக் குலுங்கும் துளி மலர்கள் வேண்டும்,
அந்தி வானில் விரவி கிடக்கும் வண்ணங்கள் வேண்டும் எனக்கு,
வெறும் வார்த்தைகள் போதவில்லை,
கவிதைகள் வேண்டும் எனக்கு,
வீட்டின் தரைகள் வேண்டாம்,
மரகத புல்வெளியும் , 
கடற்கரை மணலும் வேண்டும் என் பாதங்களுக்கு,
ஜன்னல் வழி நிலா வேண்டாம்,
மலை முகட்டில் பாறை மீதேறி ,
புலரியில் அருணன் உதயம் முதல்,
அந்தியில் அவன் சாய்வது வரை,
காண வேண்டும் இந்த கண்களுக்கு,
சொகுசு இருக்கைகள் வேண்டாம்,
காயல் நீர் மெல்ல கிழித்து,
நீர் சூழல்கல் விரிய படகில் உட்கார்ந்து பார்க்க வேண்டும் எனக்கு,
பூக்கள் வேண்டும் எனக்கு,
வரைகோடுகள் அற்று பூமியெங்கும் சிதறி கொட்டி கிடக்கும் 
காட்டு பூக்கள்..
காற்றும் காடுகளும்,
மலையும் மௌனமும்,
நதியும் நீரும்,
கொட்டும் அருவியும் ,
எல்லாம் நிறைந்த ஏகாந்தமும் வேண்டும் எனக்கு!!

சனி, 14 மார்ச், 2020 | By: Ananda

ஆனந்த லட்சுமியின் எண்ணங்களுக்குள் சில நொடிகள்..

பசி, தூக்கம், தாகம், கழிவு போலவே சில பழக்கங்களும், நம்மை ஆட்க்கொண்டு  ஆட்டி வைக்கின்றன, சில நேரங்களில். புகை பிடிப்பதையோ , மது அருந்துவதையோ நிறுத்த முயற்சிப்போர் , அல்லது வெகு நாட்களாய் நிறுத்தி விட்டதாய் நினைப்போர், திடீரென அந்த நினைவு வந்துவிட என்ன செய்வது , ஏது  செய்வந்தென்று அறியாமல் , தெளிவுக்கும் ஆசைக்கு அடிபனிவதற்கும் இடையில் சிக்கித்  தவிப்பது போல்...கலவியில் மோகத்தின் உச்ச நிலை அடைந்துவிட்ட போது , எப்படி பொறுமையாய் பொத்தான்களையோ , கொக்கிகளையோ கையாள முடியாதோ..அது போலவே -நீண்ட நாட்களாய்த் தள்ளி வைத்துவிட்டேன்..எழுத்து, ஓவியம் என்று என் உயிர் வளர்க்கும் தீணிகளை..சமையல், அலுவலகம், பிள்ளைகள், பள்ளி ...என்று ஓயாத காலச் சக்கரம். மற்றபடி போதை மருந்து போல், நிதர்சனத்தை செரித்து கொள்ள புத்தகங்கள்..சாயங்காலம் அலுவல் முடித்து வீடு திரும்பியதும் , சிறிது நேரம் இளைப்பாறி விட்டு, மீண்டும் அடுப்பறைக்கு சென்று அதே சுழலில் சுழன்று உழன்று கரை சேர பிரயத்தனப்படும் வேளையில், எந்த எண்ணங்களோ உணர்ச்சிகளோ திடீரென புயலாகாமல் இருக்க, சமையலறையிலேயே வைத்திருக்கிறேன் - ஒரு JBL ப்ளூடூத் ஸ்பீக்கர். சோல் மியூசிக், குத்து பாடல்கள், 90ஸ் ஹிந்தி பாப் , black  and white  தமிழ் பாடல்கள், 90ஸ் ஆங்கில பாப் ஆல்பம் பாடல்கள், instrumental , பக்தி பாடல்கள் என்று என் ஒவ்வொரு mood க்கும் ஏற்றாற்போல் பல playlist சேமித்து வைத்திருக்கிறேன் youtube இல்.

நீண்ட வருடங்கள் பழகி வாழ்ந்துவிட்ட தம்பதிகளின் வாழ்வில் சில intimacies.. அந்த intimacies காரணமாக சில புரிதல், privileges  உண்டு. ஒருவர் எதிரே ஒருவர் பல் விளக்கவோ, சிறுநீர் கழிப்பதோ  அல்லது குளித்துக்கொண்டே ஒரு அன்றாட வழக்காடலில் ஈடுபட முடியுமோ, அது போலவே இந்த playlist பாடல்களும் ஒரு தனி மொழி..ஒரு வித உரையாடல்..சுற்றி பல பேர் இருக்கும்போது கூட கண்களால் ஆசை, குறும்பு, நக்கல், புருவம் உயற்றி ஓர் கேள்வி, கண்களை சந்திக்காமல் பார்வை தவிர்த்துக் கொண்டே தொடரும் கோபமான மௌனம் என்று வார்த்தை பரிமாற்றமே இல்லாமல் இருவருக்கு இடையே எத்தனையோ விதமான உரையாடல்கள் நிகழும். அது  போலவே எங்கள் playlist களும். தென்றல் வந்து தீண்டும்போது..instrumental..அது peace , soothing comfort - weekend இல் நிதானமாக கேட்டுக் கொண்டே சமைக்க..sink நிரம்பி வழிந்து தண்ணீர் குழாய் வரை முட்டும் பாத்திரங்கள் இருக்க- கருத்தவன்லான் கலீஜா..ஆத்திச்சூடி..நியூ ஏஜ் ஆத்திச்சூடி..மரணம் mass மரணம்..சர சர மட மடவென சாமான்களை கழுவி கவிழ்த்து வைக்க. அதே வேகம் ஆனால் வேறு flavour - Hips dont lie - shakira , bailamos - enrique , shape of  you..ஹிந்தி ரொமான்டிக் பாடல்கள்..bhol na halke  halke ..main phir  bhi tumko chaahoonga...இப்படி பல play list கள்.

இன்று மாலை தொடங்கியது 90ஸ் மெல்லிசை பாடல்கள்..முதல் பாடல்-பச்சைக் கிளிகள் தோளோடு..அந்த பாடல் வரிகளுக்கு நான் அடிமை..பனி கொட்டும் மாதத்தில் உன் வெப்பம் ஆனந்தம்..என் காது வரைக்கும் கம்பளி போர்த்தும் கருணை ஆனந்தம்..மனதை பிழிந்து எடுக்கும் வரிகள்..அடுத்து காதல் சடுகுடு..ஆனந்த யாழை மீட்டுகிறாய்..ஒவ்வொரு முறை கேட்கும்பொழுதும் மனம் உருகி கண்ணில் லேசாய் நீர் பெருகும்..பொதுவாக அப்பா மகள்உறவு சார்ந்த  மிகவும் உருக்கமான பாடல்கள் என்னை பாதிப்பதுண்டு..அனால் இந்த பாடல் கேட்கும்பொழுது நான்பாதிப்படைவது நா.முத்துக்குமாரின் மகளை நினைத்து..நினைவு தெரிவதற்கு முன்பே அப்பாவை இழப்பது ஒரு வித  துயரம்...ஆனால்  இப்படி ஒரு பாடலை எழுதி இருக்க கூடிய அப்பாவை நினைவு கொள்ள முடியாதபடி செய்த விதி..அந்த  அநீதியை நினைத்து ஒவ்வொரு முறையும் சற்று விம்மி அடங்கும் என் மனம்.அதை தொடர்ந்து இந்த சிரிப்பினை அங்கு பார்த்தேன், என் ஸ்வாச காற்றே, மாய நதி இன்று..halchal hui பாடல்..மாதுரி தீட்சித் படத்தில் ஓர் அழகான பாடல்..kadhmon ko sambhaale ..nazron ka kya kare ..nazron ko sambhaale toh dhil ka kya kare ..

இப்படி உயிருக்கு நீரூற்றி தழுவும் பாடல்கள் பல ஓடி முடிந்தும் சஞ்சலம் நீங்கவில்லை மனதில். அடி மனம் எதையோ பிழிந்து கசக்கி கொண்டே இருந்தது. செரி ரைட்டு.  last hope . மன அமைதியை தேடும்போது..பல நேரங்களில் இப்படி நடப்பதுண்டு. கந்த சஷ்டி கவசம். அதை பாடவிட்டு கூடவே கேட்டுக் கொண்டும் ,  பாடி கொண்டும்  வெஜிட்டபிள் குறுமா தாளிப்பதும், பிள்ளைகளுக்கு சாதம் பிசைந்து கொடுப்பது என நடந்து கொண்டிருக்க ..என் எண்ணங்களெல்லாம் திரண்டு பாத்திரத்தை விட்டு பொங்கி வழிய போகும் பால் போல..'எழுது' 'எழுது' 'எழுது!!!!!'..ஒரு குரல் என் மூளைக்குள் மெல்ல  பெருகிக் கொண்டிருந்தது.

காதல் சடுகுடு கேட்ட 5நிமிடங்களில்   சஷ்டியா ??!! என்று என்னை பற்றி அறியாதோர் வியக்கலாம். ஆனால் என் கார்த்தி அசருவது இல்லை. அவன் போக்குக்கு அவன் Netflix யில் Locke & Key என்றொரு விறுவிறுப்பான தொடர் பார்த்து கொண்டிருந்தான். Another priviledge of intimacy and friendship. We can listen and feel for the same music and be at peace with the silence. We can live in the same house with two discordant notes of music and yet be in harmony with each other or sometimes listen to discordant loud notes of music when in anger just to spite each other, which is a different story altogether. Coming back to point..

கந்த சஷ்டி, குருமாவுக்கு இடையே..ஓயாமல்.."எழுது எழுது எழுது" என்ற குரல்..தப்பித்து சிறுநீர் கழிக்க சென்ற போதும்..அதே குரல்.."எழுது..எழுது"..கஷ்டப்பட்டு அந்த குரலை mute  செய்தால்..background ல ..சஷ்டி-"முட்டு முட்டு முழிகள்  பிதுங்கிட.." அவ்வளவுதான். kitchen ல பிரிட்ஜ் மேல chair போட்டு ஏறி , டைரி அ தேடு..ஷெல்ப் எ தெறந்து microtip pencil அ தேடு.சாப்பிடலாம் னு  கலந்து வெச்ச சோத்துத் தட்ட left ல கடாசு..கழுவலாம் னு நெனச்ச கடாய தூக்கி ரைட் ல கடாசு. அடுப்புல கொதிக்கிற குறுமா வ off பன்னு . இப்போ இந்த நிமிஷம்..இந்த நொடி..எழுதியே ஆகணும்..தமிழா english  ஆஹ்? கவிதையா கருத்தா? முதல் புத்திக்கும்  கடைசி புத்திக்கும் சம்பந்தம் இருக்கா? Finesse ?? Rhyme ?? Reason ?? எந்த வெளக்கெண்ணெய்யும் இல்ல. ஊரு சனம் பிள்ளை குட்டி எல்லாம் தூங்கியாச்சு. champagne பாட்டில் எ ரொம்ப நாள் குலுக்கி திடீர்னு தெறந்துட்டா..பொங்கி வழிஞ்சு நாலாபக்கமும் தெறிக்கிற மாறி ..என் எழுத்துக்களும்..தெறிக்க தெறிக்க சுட சுட எழுதியாச்சு. என்ன எழுதினேன்னு தெரியல.சாப்பிடல சமைக்கல..ஆனா ஏதோ எழுதியாச்சு.  கை வலிக்க வலிக்க ஆறு பக்கம்.இதை type பண்ணி blog ல ஏத்த இன்னும் எத்தனை நாள் வாரம் மாதம் ஆகும் னு தெரியல..ஆனா இன்னைக்கு இப்போதைக்கு எழுதியாச்சு.

With a feeling of peace, relief and adrenaline all at the same time..going back to குறுமா ..சோறு..சாமான்..etc etc . உயிர் பசி சற்றே அடங்கியது..இனி வயிற்று பசிக்கு..

One day inside the head of Anandalakshmi!!



செவ்வாய், 25 ஜூன், 2019 | By: Ananda

மெளனத் தீ..


சொற்கள் எல்லாம் தீர்ந்து போயின..
தீயென பற்றி எரிந்தது அவள் மௌனம்..
அதை அணைக்க இயலாது தவிக்கையில்,
நீர் தெளிக்க ஒரு கையும் நீள வில்லை,
அந்த மௌனம் சுடர்விட்டு மெல்ல எரிந்தது..
அதை மறைக்க ஆயிரம் சத்தங்கள் தேவை பட்டன..
உங்கள் ஒவ்வொரு வீட்டிலும் ஒலிக்கிறது அந்த மௌனம்..
சிலர் வீட்டில் சீரியல் சத்தம்..
சிலர் வீட்டில் ரேடியோ சத்தம்..
சிலர் வீட்டில் குழந்தைகளை திட்டும் சத்தம்..
இப்படி மறைக்கவும் மறக்கவும் எத்தனையோ சத்தங்கள்..
ஆயினும் அந்த மௌனத் தீ சத்தமாக எரிந்து கொண்டுதான் இருக்கிறது!!
காது கொடுத்து கேளுங்கள் சுயநல மூடர்களே..
வெள்ளி, 11 ஜனவரி, 2019 | By: Ananda

தீராத ஆசை..




படுக்கையில் உனைவிட்டு எழுந்து வர யத்தனிக்கையில்-
என் உடல் வெப்பம் விலகுவதை வைத்து,
சட்டென்று திடுக்கிட்டு எழுந்து, என்னைக் கட்டிக்கொள்கிறாய் ..
என்னைத் தொடர்ந்து சமயலறை புகுந்து,
அக்காளை பள்ளிக்கு அனுப்பும் வரை பார்த்துவிட்டு..
இங்குதான் இருக்கிறாள் அம்மா என்று- 
உறுதி செய்து கொண்டு தூங்கும் உன்னை..
போர்வைக்குள் புதைந்து கிடக்கும் என் புதையலை,
பார்த்துக் கொண்டே இருக்க தூண்டுகிறது..
உன்னை மீண்டும் கருவில் கிடத்த ஆசையில்லை..
நீ வளர்ந்து ஓவியம் வரையவோ,
கவிதைகள் புனையவோ ஆசை படவில்லை,
மடிமீது அமர்ந்து, மார்மீது சாய்ந்து,
கழுத்தை இரு கைகளால் கட்டிக்கொண்டு ,
என் கன்னங்களில் முத்தமிட்டு..
ஒரு புன்னகை செய்வாயே..
கண்களில் மின்னலும், இதழில் சிரிப்புமாய்,
இப்படியே என் இரு கைகளுக்குள் இழைந்து 
இருந்துவிடடி என் கண்மணி..
பள்ளியும் வேண்டாம்..பருவமும் வேண்டாம்..
யதார்த்தத்தால் சிதைந்து விடாத புன்னகையும்,
வெகுளித்தனம் குன்றாத பார்வையும்,
உனக்காவது மிஞ்சி இருக்கட்டும்..
வெள்ளி, 15 ஜூன், 2018 | By: Ananda

அதியும் நீயும்..



ஒருவேளை உன்னை மறந்துவிட்டேனோ என்னவோ..நொடிக்கு ஒரு முறை உன்னை நினைவுபடுத்திக்கொண்டே  இருக்கிறாள்..அவள் கண்களில் இருக்கும் குறும்பு, அந்த சிரிப்பு, கோபம், பிடிவாதம், தானே செய்துகொள்ள வேண்டும் என்ற வைராக்கியம்..அக்காவை அவள் ஆட்டிவைக்கும் தோரணை..அணைத்திலும் உன் சுவடு தெரிகிறது எனக்கு..பல வருடங்களுக்கு முன் நீயும் நானும் உரையாடியது ,இன்று பல யுகங்களுக்குமுன் பேசியதுபோல் தோன்றுகிறது..உனக்கு என்னைப்போல் ஒரு மகளும் எனக்கு உன்னை போல் ஒரு மகனும் பிறக்கும்..என்னை போல் இருப்பதால் உன் மகள் மக்காகவும் , உன்னைப்போல் இருப்பதால் என் மகன் அறிவாளியாகவும் இருப்பார்கள் என்று சொன்னேன்..அதற்கு உனக்கு பிறக்கும் பிள்ளையை மருத்துவமனையில் இருந்து நீ பார்க்கும் முன்னரே எடுத்து சென்று விடுவேன் என்றாய்..இன்று சற்றே மாற்றம்..உன்னை போல் மகள் ஒன்றும் என் கணவனின் அக்காவை போல் மகள் ஒன்றும்..உன்னிடம் நான் சிக்கி தவித்ததுபோல் , இன்று அவளிடம் சிக்கித்தவிக்கிறாள் அக்கா..என்னைப்போல் இருக்க என் மருமகனோ மருமகளோ இல்லாமல் போனது..