புதன், 29 ஜூலை, 2009 | By: Ananda

காற்றின் திசைக்கெல்லாம்
இசைந்துக் கொடுக்கும் தென்னங் கீற்று,
திசை அறியாமல் வேலி எங்கும்
படரும் கொடி,
கண்ணுக்கெட்டிய தூரம் வரை
மணற்போர்வை விரித்த பாலைவனம்,
மரத்தடியில் விழத்துடிக்கும் கிழிந்த இலை,
மெதுவாய் உருகும் பனிக்கட்டி,
மரத்தில் சிக்கி
மீண்டும் பறக்க துடிக்கும் பட்டம்,
பாறையின்மேல் தெறித்து
சிதறிய நீர்த்துளி,
இவற்றுள் எதைக் கண்டாலும்,
கரை தேடும் அலை போல்,
அலைந்து கொண்டிருக்கும் என் மனமே,
நினைவுக்கு வருகிறது!!
திங்கள், 26 ஜனவரி, 2009 | By: Ananda

தனிமை தென்றல்




தோப்பில் இருக்கும்போதுதான்
தனி மரமாய் உணர்கிறேன்,
முளைத்துக் கிடக்கும் இலைகளுக்கு நடுவே-
இருக்கும்போது தான்,
உலர்ந்த ஒற்றைச் சருகாய்,உதிர்ந்து போகிறேன்,
தொடக்கத்திலிருந்தே கிடைக்காத சிலவற்றாலா,
பல வருடங்கள் ஏங்கித் தவித்தப்பின்
கிடைத்த சிலவற்றாலா,
கிடைத்தவை கிடைத்ததின் சுகம்
உணரும் முன்னேயே இழந்து விட்டதாலா,
இனி எத்தனை வருடம் ஏங்கி தவித்தாலும்
கிடைக்க போவதே இல்லை என்பதாலா,
எப்படி சொன்னாலும்,இந்த வலி என் உள்ளே
ஊடுருவி,எங்கோ ஓர் மூலையில்
என் ஆயுள் வரை ஆக்கிரமிப்பு செய்து கொண்டிருக்கிறது!!
சிரிப்பொலியில் மௌனமாய்
சிதறி விழும் கண்ணீர் துளிகலென,
சுற்றி நிறைந்திருக்கும் சத்தங்களில்,
எனக்கு மட்டும் கேட்கும் மௌன இசையென,
கடற்கரை காற்றில் கூட என்னை மட்டும் சூழ்ந்து கொண்டுவிட்டது
இந்த தனிமை தென்றல்.........