வெள்ளி, 6 ஜூலை, 2012 | By: Ananda

இங்கு தான்..





இங்கு புகைப்படத்தில் மட்டுமே புன்னகை பூக்கிறது,

இங்கு உதட்டில் மட்டுமே மலர்ச்சி இருக்கிறது-
உள்ளத்தில் இல்லை,

இங்கு பேச்சில் மட்டுமே நட்பு இருக்கிறது-
செயலில் இல்லை,

இங்கு பாடப் புத்தகத்தில் மட்டுமே பண்பு இருக்கிறது-
பழக்கத்தில் இல்லை,

இங்கு சமூக வலைதளத்தில் தான் சகலமும் நடக்கிறது,


இங்கு துரித உணவு போலவே, துரித உறவும் கிடைக்கிறது,

இங்கு உடையில் மட்டுமே நாகரிகம் இருக்கிறது-
எண்ணங்களில் இல்லை,

இங்கு ஒரு கை உதவியில் நீள்வதற்குள்-
உள்ளத்தில் ஓராயிரம் சுய லாப-நஷ்ட சிந்தனை உழல்கிறது,

இங்கு சின்னஞ்சிறு சந்தோஷங்களுக்கும் பகிர்தலுக்கும்
நேரமின்மை இருக்கிறது,


இங்கு எளிமை ஏழ்மையாகவும், ஆடம்பரம் சுய-கௌரவமாகவும்
கருதப்படுகிறது,

இங்கு நிற்பதற்கும் நடப்பதற்கும் கூட போட்டியும் விளம்பரமும் தேவைப்படுகிறது,

இங்கு செயற்கையாக சகல இயற்கையும் சிருஷ்டிக்கப்படுகிறது,

வருத்தம் யாதெனில் இங்குதான் - நானும் இருக்கிறேன்,
இதே சமூகத்தில் இது போலவேதான் என் மகளும் இருக்க நேரிடும்..