திங்கள், 17 ஜூன், 2013 | By: Ananda

அந்நிய தேசத்து, ஆடம்பர வாழ்க்கை..

 
 
அறைக்கு அறை , நான்கு தொலைபேசிகள்,
 
அறைச் சுவரையே அடைக்குமளவு தொலைக்காட்சி,
 
ஒவ்வொரு முறையும் புதிதாய் அணிந்துக்கொள்ள-
 
அளவுக்கு அதிகமான ஆடைகள்,
 
ஓர் அறை அதற்கென்றே,ஒதுக்க வேண்டிய அளவிற்கு-
 
எண்ணில் அடங்கா விளையாட்டுப் பொருட்கள்,
 
இருக்கும் மூன்று பேருக்கு,இப்படியாக நான்கு அறைகள்,
 
எங்கு சென்றாலும், நான்கு சக்கரங்கள் தேவை,
 
நடக்கவே வேலையில்லை,ஆனாலும் மூன்று பேருக்கு-
 
முப்பது காலணிகள்,
 
ஆண்டுக்கு இருமுறை,உலகளாவிய இன்ப சுற்றுலாக்கள்,
 
ஈறாண்டுக்கு ஒருமுறை முடிந்தால்,தாய்நாட்டு பிரவேசம்,
 
கேட்பதையெல்லாம் வாங்கிக் கொடுத்துவிட்டால்,
 
பிள்ளைகளுக்கான கடமை தீர்ந்தது,
 
கேட்காமலே மாதம் ஒருமுறை பணம் அனுப்பிவிட்டால்,
 
பெற்றோருக்கான கடமை தீர்ந்தது,
 
இங்கு வீட்டின் நான்கு சுவர்களுக்குள்,
 
புன்னகைப் பூக்கிறதோ இல்லையோ,
 
வீட்டுச் சுவற்றில் ஆணியடித்து மாட்டி வைத்திருக்கிறோம்,
 
எப்போதும் புன்னகைத்துக் கொண்டிருக்கும் புகைப்படங்களை!!
 
வீட்டு வாசலைத் தாண்டிவிட்டால்,
 
முகத்தில் கண்ணாடியை மாட்டிக் கொள்வது போல,
 
நாகரீக புன்னகையையும், சேர்த்து மாட்டிக் கொள்கிறோம்!!
 
சுற்றிலும் ஆடம்பரம் அள்ளி தெறிக்கும் எங்களுக்கு,
 
குணத்திலும் மனத்திலும் மட்டும் ஏழ்மைக் குடிக்கொண்டிருக்கிறது..